Uncategorized

கதையளத்தல்

Today is International Mother Language Day and our blog is turning multilingual today. We are hosting a series of blog posts by different authors, illustrators, parents, educators and children – sharing their thoughts on languages and more. International Mother Language Day is an observance held annually on 21 February worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. 2015 is the 15th anniversary of International Mother Language Day.

N.Chokkan (என். சொக்கன்) is an avid blogger and writer. The Tamil translator of many of our books, he encourages his children to write too. Here he shares with us how children need to be respected for their creative output, whatever and however it may be. Written in his mother tongue, Tamil, this should be a treat to young parents!

                                   (Illustration by Henu for Ritu’s Letter Gets Longer)

 கதையளத்தல்

சமீபத்தில் நண்பர்
கோகுல் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவரது சோஃபாமீது ஒரு நோட்டுப் புத்தகம் திறந்து
கிடந்தது. எடுத்துப் புரட்டினேன்.
அது ஒரு கதை. அவருடைய
மகன் எழுதியது. கொட்டை கொட்டை எழுத்து, ஆங்காங்கே படங்கள், பல வண்ண மை.
நான் அதைப் பார்க்கிறேன்
என்றதும், அவன் ஆர்வத்துடன் அருகே வந்து அமர்ந்துகொண்டான், ‘எப்படி இருக்கு கதை?’ என்றான்.
‘பிரமாதமா எழுதியிருக்கே’
என்றேன், ‘நிறைய எழுதுவியா?’
’ஓ’ என்றபடி உள்ளே
ஓடினான். இன்னொரு நோட்டுடன் திரும்பி வந்தான்.
அந்தக் கதை மேலும்
நீளமானது. ஆனால் ரசமாக இருந்தது. சிறுவர்களுக்கே உரிய சுவாரஸ்யமான கற்பனைகள், திருப்பங்கள்.
கதையின் நிறைவில் ‘இந்தக் கதைக்கு நீங்கள் எத்தனை மதிப்பெண் தருவீர்கள்?’ என்று கேட்டு
ஒரு Feedback பக்கம்கூட இருந்தது. அங்கே சிலர் அந்தக் கதைக்கு நிறைய மதிப்பெண்களைக்
கொடுத்துப் பாராட்டியிருந்தார்கள்.
‘வெரி குட், இன்னும்
கதை ஏதாவது எழுதியிருந்தா கொண்டு வா, படிப்போம்’ என்றேன். மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று
தேட ஆரம்பித்தான் அவன்.
கோகுலும் அவர்
மனைவியும் ‘இன்னிக்கு ராத்திரி உங்களைத் தூங்க விடமாட்டான்’ என்றார்கள் பெருமையுடன்.
‘எப்பப்பார் கதை, கதை, இவனுக்கு நோட்டு வாங்கிக் கொடுத்துக் கட்டுப்படியாகலை, யார்
வீட்டுக்கு வந்தாலும் கதை படிங்கன்னு தொல்லை பண்ணுவான்’ என்று செல்லமாகச் சலித்துக்கொண்டார்கள்.
எனக்கு என்னுடைய
சிறு வயதுதான் நினைவுக்கு வந்தது. அப்போது ஒரு பெரிய (இரண்டு குயர் என்று சொல்வோம்,
இப்போதெல்லாம் அந்தக் ‘குயர்’ என்ற வார்த்தையே காதில் விழுவதில்லை) நோட்டுப் புத்தகம்
வாங்கி வைத்துக்கொண்டு இங்க் பேனாவில் கதைகளாக எழுதித் தள்ளினேன். எல்லாம் நாலு பக்கம்,
ஆறு பக்கம், ஒரு கதை முடிந்தவுடன் கோடு போட்டு அங்கேயே அடுத்த கதையை ஆரம்பித்துவிடுவேன்.
அந்தக் கதைகளை
யார் படித்தார்கள், என்ன சொன்னார்கள் என்பதெல்லாம் இப்போது சுத்தமாக நினைவில்லை. ஆனால்
விதவிதமான கதைகளை எழுதித் தள்ளியதுமட்டும் நினைவிருக்கிறது.
இப்போது அந்த நோட்
எங்கே என்று தெரியவில்லை. ஆனால் கல்லூரியில் படித்தபோது எழுதிய கதைகளைப் பத்திரமாக
வைத்திருக்கிறேன். சுமார் இருநூறு கதைகளுக்குமேல், எல்லாம் கையில் கிடைத்த காகிதங்களில்
எழுதி ஸ்டேப்ளர் போட்டுப் பாதுகாத்தவை. சுமார் 99% திராபை, எங்கேயாவது ஒரு முத்து இருக்கலாம்.
ஸ்கான் செய்து வலையேற்றினால் என் மானம் போகும்.
கதைகள் என்றால்,
சிறுகதைகள்மட்டுமில்லை. என் கணிப்பில் நான் சுமார் நூற்றைம்பது நாவல்களை எழுத ஆரம்பித்து
முதல் அத்தியாயத்தோடு (அல்லது முதல் பக்கத்தோடு) நிறுத்தியிருக்கிறேன்.
இப்போதெல்லாம்
நான் அதிகம் கதைகள் எழுதுவதில்லை. ஆனால் வேறெதையாவது தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இந்தத் தொடர்ச்சியான பழக்கத்துக்குக் காரணம், அந்த திராபைக் கதைகள்தான் என்று நிச்சயமாக
நம்புகிறேன்.
பொதுவாகக் குழந்தைகள்
பிறருக்கு நடனம் ஆடிக் காண்பிப்பது, ரைம்ஸ் சொல்வது என்றுதான் விருந்தினர்கள்மத்தியில்
கவனம் பெறுகிறார்கள் (அழகுக்காகக் கவனம் பெறும் ‘க்யூட் பேபி’க்கள் கதை தனி). அந்தக்
கவனம் அவர்களுக்கு அவசியப்படுகிறது.
அதேபோல், ஓவியங்கள்.
ஆனால், பல பெற்றோர் அவற்றைக் கிறுக்கல்கள் என்று நிராகரித்துவிடுவதால், ஓரளவுக்குமேல்
அவர்கள் அதில் ஈடுபடுவதில்லை.
சொல்லப்போனால்,
நடனம், ரைம்ஸ் சொல்லல் போன்றவை ‘போலச் செய்தல்’ வகையில்தான் பெரும்பாலும் வரும். அதாவது,
இன்னொருவர் செய்ததை, சொன்னதை அப்படியே காப்பியடிப்பது, அந்த வயதில் அதில் படைப்புணர்வு
வளர வாய்ப்புகள் குறைவு.
ஓவியம் அப்படியில்லை.
போலச் செய்தாலும், அதில் ஒரு சிறு துளி நம் பாணி இருக்கிறது என்கிற திருப்தி வரும்.
இதன் அடுத்த கட்டம்,
கதைகள். ஏற்கெனவே எங்கேயோ கேட்ட கதையை மீண்டும் எழுதினால்கூட, அது நம் படைப்பு என்கிற
முழுத் திருப்தி நமக்கு இருக்கும். காரணம், சிந்தனை பெரிது என்று அந்த வயதில் நாம்
நினைப்பதில்லை, எழுத்து பெரிது, இதை நான் எழுதியிருக்கிறேன், போதாதா?
கோகுலின் மகன்
எழுதிய கதை அவனுடைய சிந்தனையா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி இல்லாவிட்டாலும்
பரவாயில்லை என்றுதான் நான் சொல்வேன். யாரோ சொன்னது, எங்கோ கேட்டதைக்கூட, உட்கார்ந்து
எழுதுதல் என்பது ஒரு முக்கியமான பழக்கம். அதைப் பிறரிடம் காண்பித்தல் என்பது இன்னொரு
ஆனந்தமான பழக்கம், இந்த இரண்டும் பழகினால், ஒழுங்கான எழுத்து பின்னர் தானே வரும்.
அதாவது, எழுதப்
பழகுதல் வேறு, எழுதுதல் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.
குழந்தை தட்டுத்தடுமாறி
நடக்கும்போது ரசிக்கிறோமல்லவா? எழுதப் பழகுதலையும் அப்படிதான் ரசிக்கவேண்டும். நம்முடைய
விமர்சகர் பார்வையை, தர அளவுகோல்களை அங்கே திணிக்கக்கூடாது.
அதாவது, எழுதும்
பழக்கம் என்பதுதான் முதலில் முக்கியம். தரத்தை அவர்கள் அப்புறம் பழகிக்கொள்வார்கள்.
இன்னொரு விஷயம்,
குழந்தைக் கதைகள் என்பவை வேறுவிதம். ’ஒரு தாத்தா பூங்காவுக்குச் சென்றார். கிளியைப்
பார்த்தார். கீ கீ என்று கத்தினார். அதுவும் பதிலுக்குக் கத்தியது, முற்றும்’ என்று
அவர்கள் ஒரு கதையை முடித்துவிடுவார்கள்.
இது நமக்குச் சலிப்பூட்டலாம்.
இதென்ன கதை, ஹீரோ இல்லை, வில்லன் இல்லை, எடுப்பு இல்லை, தொடுப்பு இல்லை, முடிப்பு இல்லை,
நீதி இல்லை, கலை அழகு இல்லை, ரசமான சொற்கள் இல்லை…
இப்படி ‘இல்லை’யையே
பார்த்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? அந்தக் குழந்தை உட்கார்ந்து எழுதி உங்களிடம்
காட்டுகிற சந்தோஷம் இருக்கிறதே, அது நம் கண்ணில் படவேண்டாமா?
கோகுலும் அவர்
மனைவியும் தங்கள் மகனுடைய கதைகளைப்பற்றிச் செல்லச் சலிப்பு கொள்ளும்போது, ’ஒருவேளை
இவன் தன் தர அளவுகோலை என்னுடைய குழந்தையின் கதைமீது செலுத்தி அவனைக் காயப்படுத்திவிடுவானோ’
என்கிற பதற்றத்தைப் பார்த்தேன். தங்கள் மகனின் எழுத்தை அவர்கள் எந்த அளவு ரசிக்கிறார்கள்,
நேசிக்கிறார்கள் என்பது புரிந்தது, அவர்களை நினைத்துப் பெருமை கொண்டேன்.
உங்கள் குழந்தைக்கு
எழுதுகிற, கதை சொல்கிற பழக்கம் இருந்தால் அதை ஊக்கப்படுத்துங்கள். அதனால் பாடம் பாதிக்கப்படுமோ
என்று நினைக்காதீர்கள், உண்மையில், கதை சொல்லும் பழக்கம் அவர்களை நன்கு சிந்திக்கிறவர்களாக
மாற்றும், அவர்களுடைய படிப்பில் துணை புரியும்.
அவர்கள் கதை எழுதிக்
காட்டும்போது, உடனே பாராட்டுங்கள். அதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பரவாயில்லை,
‘பிரமாதமா எழுதியிருக்கே’ என்று சொல்லுங்கள். அதன்பிறகு பிழைகளைச் சுட்டிக்காட்டலாம்.
விமர்சனம் என்பது
சாண்ட்விச்மாதிரி இருக்கவேண்டும் என்பார்கள். பெரியவர்களுக்கே அவர்களுடைய குறைகளைச்
சுட்டிக்காட்டும்போது ஒரு பாராட்டு, ஒரு குறை, இன்னொரு பாராட்டு என்று பொட்டலம் கட்டித்
தரவேண்டும். சிறியவர்களுக்கு ஏழெட்டுப் பாராட்டுக்கு நடுவே ஓரிரு குறைகளை வலிக்காமல்
சொல்வது ஒரு கலை, அதைப் பெற்றோரும் மற்றோரும் கற்றுக்கொள்ளவேண்டும்.
குறை சொல்லாமலே
இருந்துவிடக்கூடாது. பிழையின்றி எழுதுதல் ஒரு பெருமை என்பதை அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும்.
தங்கள் எழுத்தில் அறியாமல் வந்துவிட்ட பிழைகளுக்காக நாணும் பழக்கம் அவர்களுக்கு வரவேண்டும்.
அதன்பிறகு, அறிந்து பிழை செய்யமாட்டார்கள்.
ஆரம்பத்தில் பிறருடைய
சிந்தனைகளை (அதாவது, யாரிடமோ கேட்ட கதைகளை) எழுதும் குழந்தைகள் பின்னர் சொந்தமாகக்
கற்பனை செய்து எழுதத் தொடங்குவார்கள். ஒரு புதிய உலகத்தைத் தாங்களே உருவாக்கி இஷ்டம்போல்
இயக்குகிற கர்வம் அவர்களைச் செலுத்தும். அதன்பிறகு, யாரும் அவர்களைத் தூண்டவேண்டியதில்லை.
அதுவரை, அவர்களுக்கு
ஆதரவு தேவை. ‘இது ஒரு பெரிய விஷயமா?’ என்று அலட்சியப்படுத்தாமலிருப்பது அவசியம். அவர்களுடைய
ஒவ்வொரு கதையையும் கொண்டாடவேண்டும், வேலையைச் செய்துகொண்டே உம் கொட்டினால்கூடப் போதும்,
’கதை ஆச்சா? போய் வேலையைப் பாரு’ என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள், நீங்கள் உங்கள் குழந்தையை
அல்ல, அவர்கள் குழந்தையை அலட்சியப்படுத்துகிறீர்கள்.
சிறு வயதில் குழந்தைகள்
எழுத மறுக்க முக்கியமான காரணம், சோம்பேறித்தனம்தான். இதைவிட டிவி பார்ப்பது சுலபம்,
விளையாடுவது சுலபம்!
டிவியும் விளையாட்டும்
முக்கியம் என்றல்ல, இந்தப் பழக்கமும் முக்கியம். சிறிய அளவில் எழுதச் சொல்லுங்கள்,
அதற்கேற்ப படம் வரையச் சொல்லுங்கள், இதைத் தொடர்ச்சியாகச் செய்தால் அவர்கள் அங்கிருந்து
முன்னேறி வருவார்கள்.
அவர்கள் கதை எழுத
நோட்டுப் புத்தகங்களைக் கிழித்தால் கோபப்படாதீர்கள். இயன்றால் அதற்கென்றே ஒரு தனி நோட்டுப்
புத்தகம் வாங்கிக் கொடுங்கள். அதில் அவர்கள் படம் வரைந்து பழகினால் மறுபடி கத்தாதீர்கள்.
கதை என்பது எந்திர ரயில் ஓட்டுவதுமாதிரி இருப்புப் பாதையில் ஒரேமாதிரி சீராகச் செல்கிற
விஷயமல்ல, குதிரைச் சவாரிபோல அதில் ஒருவிதமான ஒழுங்கற்ற ஒழுங்கு இருக்கும், அது உங்களுக்குப்
புரியாது, அவர்களுக்குப் புரியும், அதைச் சொல்லத் தெரியாது.
முக்கியமாக, நிறைய
படித்தால்தான் நிறைவாக எழுத இயலும். கதை சொல்வது எப்படி என்கிற நுட்பத்தை ஆயிரம் பேர்
சொல்லித் தருவதைவிட, பத்து நல்ல புத்தகங்கள் அவர்களுக்குச் சொல்லிவிடும். அந்தப் பத்து
நல்ல புத்தகங்களைக் கண்டுபிடிக்க அவர்கள் ஐநூறு புத்தகங்களைப் படிக்கவேண்டியிருக்கும்.
புத்தகங்களுக்காகச்
செலவழிக்க இயலாது என்கிறவர்கள், பக்கத்தில் உள்ள நூலகத்தைக் கண்டுபிடிக்கலாம். எங்கள்
பகுதியில் நூலகமே இல்லை என்று சொல்லாதீர்கள், உங்களுக்குத் தெரிந்திருக்காது. தேடிக்
கண்டுபிடியுங்கள், பெரும்பாலான நூலகங்கள் இலவசம்தான். வாரம் இரண்டு நாள் குழந்தைகளை
அங்கே அழைத்துச் செல்லுங்கள், நிறைய படிக்கச் சொல்லுங்கள். அதனால் பாடத்துக்குப் பயனுண்டா
என்று யோசிக்காமல் மனத்துக்குப் பிடித்ததைப் படிக்கப் பழக்கப்படுத்துங்கள். ’ பாடப்
புத்தகத்தை எடுக்காம என்ன எப்பப் பார் கதைப் புத்தகம்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
’இதைப் படித்துவிட்டு அதைப் படி’ என்று ஒழுங்கை அறிமுகப்படுத்துங்கள்.
பிள்ளையை நூலகத்துக்கு
அழைத்துச் செல்லும்போது அந்த ஒரு மணி நேரம் நான் என்ன செய்வது?
நீங்களும் அதே
புத்தகங்களைப் படிக்கலாம். குழந்தை இலக்கியத்தை ரசிப்பதுதான் நல்ல ரசனையின் முதல் வளர்ச்சிப்
படி.
Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DISCLAIMER :Everything here is the personal opinions of the authors and is not read or approved by pratham books before it is posted. No warranties or other guarantees will be offered as to the quality of the opinions or anything else offered here